வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ மீளெழும் காலம் “ கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.06.2022

வரலாற்று ஏடுகளில் இருண்ட காலமாய்
கறைபடிந்த காலமாய் களப்பிரர் காலம் அமைய
எம் தேச வரலாற்றில் கோட்டாக்களின் காலமும்
கறைபடிந்த கரும்புள்ளியான இருண்ட காலமே
கடந்த காலங்கள் போரின் வடுக்களோடு கழிய
இன்றைய காலமோ பசி பட்டினியோடு நகருது
மீளெழும் காலம் வந்திடுமா? மீட்சி தான் கிட்டிடுமா ?

கடந்தகால அவலம் தந்த பரிசு
பூமிப் பந்தெங்கும் புலம் பெயர்வுகள்
சொந்த நாட்டிற்குள்ளேயே ஏதிலிகள்
இன்றைய காலம் இக்கட்டான காலம்
வரலாறு காணாத வங்குரோட்டுகள்
வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைகள்
மீளெழும் காலம் தான் எப்போ ?
ஏக்கப் பெருமூச்சுடன் எம்மின மக்கள் !

பொருளாதார நெருக்கடிகள் பஞ்சம் பசி
வாழ்வாதாரம் சீர்குலைவு வீதிகளில் மக்கள்
வாழ வழி தெரியாது மீண்டுமாய் ஏதிலிகளாகி
நாடு நாடாய் அலைந்து
நாதியற்று கூடிழந்த பறவைகளாய்
மீண்டெழும் காலம் வந்திடாதோவென
முனகியபடி தொடர்கிறதே வாழ்வு !