சந்தம் சிந்தும் கவிதை

Jeyam

பாமுகப் பூக்கள்

 

சிந்தை சுவைக்கும் சந்தப் பாக்கள்

சிந்திக் கிடக்கும் பாமுகப் பூக்கள்

உச்சரித்தார் மொழியை அமுதானது செவியோடு 

அச்சேறி விழிசுவைக்க நூலாகவும் வெளியீடு 

பொருள்கொண்ட சொல்லெடுத்து மொழியுடனிங்கு விளையாட்டு 

அருளெனவே கிடைத்துவிட்ட தொகுப்பாளருக்கும் பாராட்டு 

பாலோடு பழம்சேர்த்து உண்டதைப்போல் நிறைவுவரும் 

தாலாட்டும் வார்த்தைகள்கொண்ட செவ்வாய்மாலை உவகைதரும் 

எத்தனையெத்தனையோ பாவலர்களின் கவி ஆக்கங்கள் 

அத்தனை படைப்புக்களும் பெருக்கிடும் உற்சாகங்கள் 

பல்வேறு கவியாளர்களின் கவிப்பாட்டு பரவசமே 

சொல்லாடல் அவர்கேட்டு மொழிமகிழும் இதுநிசமே 

சந்தங்கள் முத்தம்கொடுக்கும் கவிகளைக் கண்டு 

மொத்தமாக சந்தோசித்து தவிப்பதும் உண்டு 

ஆட்டிவிக்கும் மனங்களையே மொழியாலொரு நிகழ்வு 

கேட்டுவிடக் கேட்டுவிட உயிருக்குள்ளூறிவிடும் மகிழ்வு 

என்னவிதமான தலைப்பிற்கும் கொடுப்பார்கவி இவர்கள் 

சொன்னதேயேசொல்லாமல் 

படைப்பார்கவி எவர்கள் 

தளந்தந்திடும் பாமுகத்தை வாழ்த்தவென துடிக்கின்றேன் 

உளந்தந்த பாவைஜெக்கு நன்றிகூறி முடிக்கின்றேன்

ஜெயம்

07-01-2022