சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

நடிப்பு

உள்வாங்கிய உணர்வை
வெளிக்கொணரலே நடிப்பு
உலகமே கொண்டுள்ளது
அதன்மேல் பிடிப்பு

பார்த்தோரை மயக்கியது
கணேசன் நடிப்பு
பதக்கங்களைச் சூட்டியது
நவரசப் பதிப்பு
சேர்த்தொரு பெயரையாக்கியது
பெற்ற மதிப்பு
அதுவே சிவாஜி
என்னும் பொறிப்பு

உச்சிமுதல் உள்ளங்கால்வரை நடிக்கும்
ஊன்றுகோலும் பிடிக்கும்
சிகரெட்டும் உடன்நடிக்கும்
உடல்மொழியும் உச்சரிப்பும்
உதிரத்தை உருக்கும்
காவியக் கதைகளைக்
கண்முன்னே விதைக்கும்
பாவியர் வதைகளை
பாருக்குச் சொல்லும்
உறவைப் பிரிவைக் ஊடலைக் காட்டும்
உமிழ்ந்தே தமிழையும் உவப்பாய் ஊட்டும்
நடிப்புக்கு இலக்கணம்
இதுவெனக் காட்டும்
பச்சைப் பிள்ளையும்
பார்த்தே மலைக்கும்
பாலை மறந்து
பாத்திரத்தையே சுவைக்கும்
இவனே அவனென
இறையே இவனென
இதயத்துள் புகுத்தும்
இமையமே இவனென
இறுமாந்து அறையும்

மனோகரி ஜெகதீஸ்வரன்