வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023

பள்ளிக்காலம் பசுமைக் காலம்
பசுமை நிறைந்த உலாக்காலம்
பட்டாம் பூச்சியெனப் பறந்து
வட்டமிட்ட வனப்புக்காலம்
கற்பனையில் மிதந்த கனாக்காலம்
பெற்றவர் கனவை நனவாக்கிய காலம்
என் வாழ்வின் வசந்தகாலம் !

திறமைக்கு களம் தந்த கூடம்
திறவுகோலான மாடம்
கவலையே இல்லாத காலம்
சிலநொடிகள் மனக்கசப்பு
சின்னச் சின்ன சண்டைகள்
அடுத்தநொடி இணைந்தபடி
போட்டிகளில் கலந்தபடி
போட்டி போட்டுப் படித்திடுவோம் !

பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம்
விளையாட்டுப் போட்டிகள் மறுபக்கமென
மறக்க முடியாத நினைவுகள்
மனதை வருடும் நிகழ்வுகளென
பன்னிரெண்டு ஆண்டுகள் எனைச் சுமந்தபள்ளி
பணியோடு பாடம் கற்றுத்தந்த ஆசான்கள்
வாழ்வின் பொக்கிஷமான வசந்தகாலமே !