சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 273
09/07/2024 செவ்வாய்
“அத்திவாரம்”
—————-
பாம்பு இரவினில் ஓடுவதேன்..
பழங்கிணறு தானே இடிவதேன்?
தோம்பிலிருந்து ஒரு “நொடி”
தொடுத்து விட்டார் அம்மணி!

மௌனத்தில் சில நொடி……!
மாறன் சொன்னான் மறுமொழி!
அடிப்பாரற்று! அடிப்பார் அற்று!
அசந்து விட்டேன் ஒரு நொடி!

தலைப்பிற்கு இது எப்படி…….
தலையைத் தானே சொறிகிறீர்!
அலைக்க வில்லை மேலும்….
அடுத்துச் சொல்கிறேன் கேளும்!

அபிராமி தினத்தில் பெரியோர்..
அழுத்தி பிடித்து சொல்லித்தர
அரிச்சுவடி தனை படிக்கிறோம்!
அத்திவாரம் அன்று இடுகிறோம்!

நாளும் கோளும் பார்ப்போம்!
நல்ல நேரமும் கேட்போம்!
பள்ளம் மேடதைத் தவிர்ப்போம்!
பக்குவமாய் அடிக்கல் இடுவோம்!

அத்தி வாரமது பலமானால்….
அடிப்பார் என்றுமே தகராது!
சத்திய வாக்கிதை மதிப்போம்!
சகலமும் பெற்றிங்கு வாழ்வோம்!
நன்றி
“மதிமகன்”