சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 272
02/07/2024 செவ்வாய்
“பள்ளிப் பருவம்”
————————-
வாழ்வு எனும் பத்தகத்தின்
வளம் கொண்ட பருவமிது!
தாழ்வு நிலை இருந்திடினும்..
தளர்வு தரா நிலையுமிது!

புத்தகப் பையோ ஒருகையில்,
பிடிக்கும் விரல் மறுகையில்,
வித்தகம் பெறச் செல்கையில்..
விக்கல் கேட்கும் அழுகையில்!

அதுவும் இதுவும் தருவோமென,
அழுகை மாற்றிக் கண்துடைத்து..
மெதுவாய் பள்ளி செல்லவைக்க..
மேலும் பலகணம் சென்றிடுமே!

காலம் கடிதெனச் சுழன்றுவிட..
கல்லூரி வாழ்வில் நுழைந்துவிட..
பாலம் போட-நண்பரும் வந்திட..
பசையென ஒட்டும் பள்ளி வாழ்வு!

சுற்றி இருக்கும் தோழர்களே..
சுவர்க்கமென நினைக்கும் மனம்!
பெற்றதாய் தந்தையும் பிறரும்….
பேதலிக்க வைக்கும் சில கணம்!

பட்டங்கள் பலவும் கிடைக்கும்..
பக்குவம் பெற்றுக் கொண்டால்!
சட்டத்தைக் கையில் எடுத்தால்..
சரித்திரமும் தலை கீழாகும்!
நன்றி
“மதிமகன்”