சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 270
18/06/2024 செவ்வாய்
“வசந்தம்”
—————
தென்றலுக்கு இவள் தங்கை!
தேன்சொட்டும் இள நங்கை!
என்றனுக்கும் இம் மங்கை!
ஈய்ந்திடுவாள் தன் பங்கை!

வசந்தமகள் இங்கு வந்தாள்!
வளமெல்லாம் தந்து நின்றாள்!
கசப்பு நீக்கி இனிமை தந்தாள்!
களைபோக்கி இளமை தந்தாள்!

தென்மேல் காற்று வீசவைத்தாள்!
தேகம் வருடிப் போகவைத்தாள்!
தன்மேல் உலகை சிறையிட்டாள்!
தானே முதல்வி என்றுரைத்தாள்!

தென்றல் தனக்கு உறவென்றாள்!
தேனீ தனது துணையென்றாள்!
அன்றலர்ந்த மலர் தானென்றாள்!
அழகிற்கு, தானே உருவென்றாள்!

இதுபோல் என்றும் சுகம் வருமா!
இனிய வசந்தம் தினம் வருமா!
சதிசெய் குளிரும் மறைந்திடுமா!
சர்வமும் அழகாய் தெரிந்திடுமா!
நன்றி
மதிமகன்