சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

ஆண்டுக்கு ஒருமுறை
ஆனந்த விடுமுறை
அதுவும் எனைவிட்டு
அகன்றுதான் போனதே.

விடுமுறை விடுப்போடு
ஒருமுறையேனும்
தாய்மண்ணை முத்தமிடும்
முனைப்போடு கரைகின்றேன்.

காலமும் ஓர் நாள் மாறும்
என் காயமும் ஊர்போய் சேரும்
கனிந்திடும் காலம் என்
துணிவே துணையாய் வெல்லும்.

கால பெரும் பிரிவை
கனவிலும் நினைத்ததில்லை
வாழ்வு கொடும் துயரில்
வாடுமென்றும் நினைக்கவில்லை.

எண்ணமெல்லாம் உன் நினைப்பு
ஏதிலியாய் என் தவிப்பு
கண்ணாக காத்து நின்ற தாய்மண்ணே!
நீயே என் பெரும் பிடிப்பு.

எனக்கான விடுமுறை
நான்கு சுவருக்குள்
நசுங்கியே கடந்திடும்
நிலையென்றுதான் மாறுமோ?

அடுத்தவர்களை விடுமுறைக்காய்
வழியனுப்பும் போதெல்லாம்
என் விழியோரம் ஈரம்
விரைவுடனே பாயும்.

காலத்தின் கட்டாயம்
காத்திருத்தல் என்றால்
காத்து கிடந்திருப்பேன்
இது சதிவலைக்கான காத்திருப்பு.

கஜவரின் கூடாரத்துக்குள்
கரைகின்ற என் தாய்மண்ணே!
உனை காத்திட காத்திருக்கின்றேன்
விரைந்து உன் மடிசேர
முடிவொன்று தாறாய் என் முத்தே!