சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

பள்ளிப் பருவம்

தள்ளி என்னை போகாது
துள்ளி மனம் குதிக்கும்
பள்ளி பருவ நினைவுகள்
அள்ளி பருகும் அமிர்தமடா.

துயரங்கள் அறியா மனமும்
தூய்மை விலகாத குணமும்
ஓர்தாய் பிள்ளைகளாய்
ஒன்றாகிக் கிடந்த பருவம்.

தான் காண செல்வம்
தன் பிள்ளை பெற்றிட
கடினமாய் உழைத்து
கட்டி வளர்த்த பருவம்.

வெள்ளை நிற சட்டையும்
நீல நிற காற்சட்டையுமாய்
வேறுபாடு காண வண்ண அழகில்
எண்ணங்கள் ஒருமித்த பருவம்.

பிடிக்காத பாடத்தை
பிடித்து கொள்ளவைத்த
பிறேமா ரீச்சரின் பேரழகை
பிரமிப்போடு பார்து ரசித்த பருவம்.

விளங்காத பாடங்களை
விளங்கிக் கொள்ளவைக்கும்
விதுரன் ஆசிரியின் விசித்திர
விந்தைகளை கண்டு வியந்த பருவம்.

பட்டங்கள் சூட்டி பரவசமானதும்
பகிடிகள் கூடி அடியும் பட்டதும்
பக்கத்து வகுப்பு டஸ்ரரை எடுத்ததும்
பார்த்த சேரிடம் பதற்றமாய் நின்றதும்

விட்டுப் பாடத்தை செய்யாமல்
விழிபிதிங்கி நின்றதும்
வாத்தியாரின் பிரம்படிக்கு
வலிக்காமல் நடித்ததும்

பட்டமாய் பெற்றவளை
மனமிருத்தி கொண்டதுவும்
மடித்துவைத்த காகித்த்தோடு
அவள் பின்னே அலைந்ததுவும்

எள்ளி நகை ஆடியதும்
கிள்ளி விளையாடியதும்
கள்ளி அவள் பார்வைக்காய்
வெள்ளி விரதம் இருந்ததுவும்

மாலை நேர வகுப்பிற்காய்
மாங்காய் பறித்ததுவும்
வீடு திரும்பும் வீதியெங்கும்
வீண்வம்பு செய்ததுவிம்

எண்ணி எண்ணி பார்க்கின்றேன்
என்னையே இழக்கின்றேன்
இனியொரு போதும் திரும்பாத
அந்த இனிமையான பருவத்தை
என் நெஞ்சோடு சுமக்கின்றேன்.

கொள்ளியில் போகும்வரை
குறையாத பேரின்பம்
கொடுத்த சுகம் அத்தனை
குறைத்த வலிகள் எத்தனை.