சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

நடிப்பு

காலம் என் கனவை பறிக்க
கோலம் அதுவாய் இழக்க
கொடும் துயரில் நின்றேன்
சாவா! வாழ்வா! என்ற
சலனத்தில் தவித்தேன்.

இழப்புக்கள் தாங்காத
என் மனதில் இருப்பதென்னவோ
இழப்புக்கள் மட்டும்தான்
இருப்பை தக்கவைக்க
இன்பமாய் என் வாழ்வில்
இன்றுவரை ஏதுமில்லை.

நம்பிக்கை வைத்து
பழகும் நிலையில்
நானும் இனி இல்லை
நம்பிக்கை கொண்டிட
நல்லவரும் இங்கில்லை

பிடித்ததை அடைய
தரிப்பார்கள் வேடம்
நடிப்பதை உணரா
நாங்களும் பாவம்
துடிப்படங்கும் வரையில்
துவளாது நம் சோகம்.

நண்பனின் நடிப்பால்
நல்லதை இழந்தேன்
சொந்தத்தின் நடிப்பால்
முளுவதும் இழந்தேன்
காதலியின் நடிப்பால்
என் காலத்தையே இழந்தேன்.

நடிப்பவர்களோடு நாமும்
சேர்ந்தே நடிப்போம்
அப்போதுதான் எம் வாழ்வில்
பிடிப்பும் மலரும்.
நடிப்பவர்களையே
இவ்வுலகும் நம்புகின்றது
உண்மையானவர்களை
இவ்வுலகம் ஊமையாக்கி விடுகின்றது.