சந்தம் சிந்தும் கவிதை

பாலதேவகஜன்

விழிப்பு

எனையே ஆளவந்த
எந்தன் தேவதையே!
வானோர் உவந்தளித்த
பாரிஜாதப் பூமொட்டே!

உலக அதிசயங்கள்
ஏதும் நான் கண்டதில்லை
என் மடி தவளும் மருக்மொழுந்தே!
நீயே என் வாழ்வின் முதல் அதிசயமே!

துன்ப இருட்டுக்குள்
துவள்ந்து கிடந்த என் வாழ்வில்
இன்பம் விழித்திட வைத்த
என் தூண்டா மணிவிளக்கே!

எனை செளிப்போடு
வாழவைக்க வந்த சித்திரமே!
உனை காத்திட விழிப்பாக
என்றுமே நான் இருப்பேன்.

நீ வளரும் வரையில்
என் விழிகளின் விழிப்பு
உனை நோக்கியதாகவே
என்றைக்குமே இருக்கும்.

நீ வளர்ந்த பின்பு
நீயாகவே விழித்துக்கொள்
இப் பொல்லா உலகில்
பொல்லாங்கு இல்லாது வாழ்ந்திடவே.

விழிப்போடு நீயிருந்தால்
பளிபாவம் நெருங்காது
விழிப்பின்றி நீ நடந்தால்
இழிவுகளால் இடர்படுவாய்.

என் செல்ல மகளே!
உன் செளிப்புக்காக
என் விழிப்புகள் எத்தனை காலமோ!
அத்தனை காலமும்
நின்று உனையே காப்பேன்.

எந்தன் விழிகள்
விழிப்புக்களை இழந்த பின்பு
சுயமாக உந்தன் விழிப்பை
வாழ்வில் தொடர்ந்து கொண்டேயிரு.