சந்தம் சிந்தும் கவிதை

ஜெயம் தங்கராஜா

சசிச

படைப்பாளிகளின் படைப்பாளியிவர்

கவிஞர்களை ஊக்குவிக்கும் உன்னத உழைப்பு
கவிகளை சந்தத்துடன் ஆக்கிவிட அழைப்பு
மடைதிறந்த வெள்ளமென பாவலரும் முண்டியடித்து
படைத்திடுவார் பாக்களை சந்தங்கள் வடித்து

வேறுபட்ட தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும்
மாறுபட்ட போதிலும் குறையாது காரமும்
கருத்துக்களோ பஞ்சமின்றி வரிகளுக்குள் தாராளம்
அருமையான ஆக்கங்களுள் தத்துவங்கள் ஏராளம்

பாவை தூக்கிவைத்து கொண்டாடுவார் பா.வை.ஜெ
தேவை என்றென்றும் பாவேந்தர் சேவையே
அள்ளியள்ளி வழங்கிடுவார் அளவில்லாத பாராட்டு
சொல்லப்போனால் மனமதுவும் கூத்தாடும் அதைக்கேட்டு

வற்றிய கிணற்றிலும் நீராக ஊறியது
அற்புதம் நிகழ்ந்து நிலமை மாறியது
புதுப்புது படைப்பாளிகள் எழுதியே பாமுகப்பூக்களில்
புதுமைகளாய் படைக்கின்றார்கள் தங்களது பாக்களில்

பிணிகள் நெருங்காத வாழ்க்கையை வாழ்ந்து
பணியினை நெடுங்காலம் தொடர்ந்திட வாழ்த்து
கலைக்கான அர்ப்பணிப்போ அன்றுதொட்டு இன்று
கலைமகள் ஆசீர்வாதம் உமக்கென்றும் உண்டு

ஜெயம்
04-08-2024