சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சக்திதாசன்

தூரத்துப் பச்சை
வாழ்க்கைக் கனவுகள்
வார்க்கப்பட வேண்டிய
சாரத்தின் தத்துவம்

அக்கரை இருப்புகள்
இக்கரை பச்சையென
முப்பொழுதே உணர்ந்து
முன்னோர்கள் சொன்னவை

இருப்பது கந்தையாகினும்
மானத்தை மறைக்காது
பட்டுக்கு ஆசைப்பட்டு 
பரிதவிப்பு பரிதாபம்

கிடைப்பது வாழ்வில்
நொடியில் கிடைப்பதல்ல
உழைப்பதன் மகிமைதான்
உயர்த்தும் வாழ்வினில்

அத்திவாரமற அழகான
மாளிகை கட்டினால்
இத்தரையில் அவை
எப்படிநிலைத்திடும் ?

விவேகமில்லா வீரமெமை
வீழ்ச்சிக்கு அழைத்திடும்
அறிவுடன் செயலாற்றினால்
அடுக்கடுக்காய் வெற்றியே

அர்த்தமில்லா ஆசைகளை 
அடைய முயன்றிட்டால்
அழிக்கின்ற கணங்கள்
அடுத்தடுத்து வந்திடும்

உண்மையாய் வாழ்ந்து
உழைத்து மகிழ்ந்திட்டால்
அனைத்து ஆனந்தம்
அமைதிதான் வாழ்வெல்லாம்

சக்தி சக்திதாசன்