சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா பரமானந்தன்

அத்திவாரம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!

சித்திகளை நிறைத்திடும்
சீர்தானே அத்திவாரம்!
பத்திரமாய் நிலைத்திடவும்
பரிமளித்துச் செழித்திடவும்
முத்தெனவே பதியமிடும்
முத்திரையாம் அத்திவாரம்!
பலமாகும் அத்திவாரம்
படையலிடும் சரிதங்களை!

பூமியிலே உயிராகப்
பெற்றோர்கள் அத்திவாரம்!
சாமியாக நின்றிட்ட
சந்தணத்தின் சுவாசங்கள்!
நித்தியத்தின் வளர்ச்சியிலே
நிழலாகும் துணையாக
நாள்பார்த்துக் கோள்பார்த்து
நல்கிய சம்சாரம்!

ஆழமுடை அடிக்கல்லாய்
ஆனந்தத்தின் படிக்கல்லாய்
வாழ்வினைத் தோப்பாக்கி
வம்சத்தின் காப்பாக
வரைவான அத்திவாரம்!
ஆயுளின் அத்தியாயம்
ஆட்டமின்றி நகர்த்திட
ஆண்டவன் போடுவான்
அனைத்துக்கும் அத்திவாரம்!

கீத்தா பரமானந்தன்
08-07-24

ப்