வியாழன் கவிதை

வசந்தா ஜெகதீசன்

உலகவிழிக்குள் ஒற்றைமுகவரி
அடையாளப் பதிப்பின் ஆணிவேர்
அன்னை மொழியின் ஆழவேர்
என்னைச் சுமக்கும் முகவரியே
ஏற்றம் போற்றும் தாய்மொழியே

தரணியில் தோன்றிய வரலாறு
தனித்துவமான நிலைப்பேறு
சங்கமருவிய காலம் முதல்
செம்மொழிச் சிறப்பின் வேரோடி
சிந்தை நிறைக்கும் தாய்மொழியே
இலக்கண இலக்கிய நயத்திலே
ஈடிணையற்றது எம்மொழியே
ஆன்றோர் ஆற்றல் புலமையும்
அதிமதுரத் தமிழின் இளமையில்
வான்புகழ் வார்த்த திருக்குறளும் வானுயர்ந்த சான்றின் செதுக்கலில்
வாழும் தாய்மொழி காவியமே

அடுத்த தலைமுறை விருட்சத்தின்
ஆணிவேரே நீ வாழி
இலகுதமிழின் இயல்திறனில்
அழகு நிரம்பி நடைபயில்க!
தாய்மொழி நீயே தனியழகே!
நன்றி மிக்க நன்றி