சந்தம் சிந்தும் கவிதை

வசந்தா ஜெகதீசன்

அரிசியின் ஆதங்கம்….

எத்தனை ரகத்தில் எம்மினத்தார்
ஏர் உழுது விதைத்து பயன் எடுப்பார்
பயிராய் பசுமை வயல் நிறைக்கும்
பருவ எழிலில் பார் சிறக்கும்
உணவாய் சாதம் உபயமாகும்
உலகே எமக்குள் அபயமாகும்

வறுமை நீக்கும் அதிபதியாய்
வருமானம் ஈட்டும் தொழில்த்துறையாய்
உழவுத் தொழிலின் ஏர்பிடிப்பு
உயிரினம் வாழ்த்தும் பயிர்வளர்ப்பு
ஆயினும் அதற்குள் பேர்பிரிப்பு
வகைவகை நெல்லாய் வகுத்தெடுப்பர்
வைக்கோல் பயனும் அனுபவிப்பர்
நெல்லில் உமியை நிவர்த்தித்து
சாதமாகி சபையெங்கும் பசியை போக்கும் வேளையிலே
மீதமாகி குப்பைக்குள் சாதம்போடும் முன்னராய்
அரிசியின் ஆதங்கம் புரிகிறதா
அன்றாட உணவற்றோர் வறுமைக்கு
அடித்தளமெங்கெனத் தெரிகிறதா.
நன்றி