வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ இரத்தம் சிந்திய யுத்தம்……..கவி…ரஜனி அன்ரன் (B.A) 19.10.2023

இருபதாம் நூற்றாண்டில்
உலகம் சந்தித்த சிக்கலான யுத்தம்
நீண்டகாலப் போராட்டம்
நீதிக்கான போராட்டம்
நூற்றாண்டுக் கால மோதல்
நொட்டிப் பார்த்து சீண்ட
நொடிப் பொழுதில் வெடித்தது போர்மேகம்
இரத்தம் சிந்திய யுத்தமாகி
இசைவிருந்தை இறுதி விருந்தாக்கியதே !

யூதர்களின் பூர்வீகம் அரேபியரின் சொந்தமென
நாடு இரண்டாகப் பிளவுபட
ஜெருசலேம் சர்வதேச நகரமாகி
மும்மதங்களின் புனிதத் தலமாகி நிற்க
உனக்கா எனக்கா நாடு சொந்தமென
தொடர்கிறது யுத்தமும் !

நிலப்பசியின் வன்மம்
ஆயுதங்களால் அச்சுறுத்தி குண்டுமழை பொழிந்து
ஆயிரமாயிரமாய் அப்பாவிகளைக் கொன்று
நிலமெல்லாம் இரத்தம் பாய
மரண ஓலங்கள் உலகையே உலுக்குது
அமைதியெனும் ரோஜா மலரட்டும்
ஐ.நா.வே ஐக்கியத்தோடு நிறுத்திவிடு யுத்தத்தை !