“ சித்திரை வந்தாலே “…..கவி…ரஜனி அன்ரன் (B.A) 13.04.2023
இளவேனிற் காலத்தின் மலர்வு
இனிய சித்திரையாளும் நல்வரவு
நித்திலமும் இதனால் மகிழ்வு
நித்தமும் தொடரட்டும் நல்நிகழ்வு
சித்தமும் குளிருது குளிரும் விலகுது
சித்திரையாளின் சிங்கார வரவினாலே !
தமிழ் வருடத்தின் முதல்மாதம்
தமிழரெல்லாம் மகிழும் காலம்
தமிழ்ப் புத்தாண்டும் பிறந்திட
தருக்கள் துளிர்க்க மலர்கள் மலர
ஆடை அவிழ்த்த மொட்டை மரங்கள்
பச்சை ஆடையில் ஜொலிக்க
பட்டாம் பூச்சிகளும் சிறகடிக்க
பட்சிகள் இனிய கீதம் இசைத்து
பரவசமாய் தம் இனத்தைப் பெருக்க
பட்டொளி வீசி வருவாளே சித்திரையாளும் !
வசந்தமும் எழிலூட்ட தென்றலும் தாலாட்ட
விழாக்களும் களைகட்ட வீடுகளும் கலகலக்க
எத்திரை மறைத்தாலும் அத்தனையும் விலக்கி
சித்திரையாள் நல்முத்திரை பதித்து
பத்தரை மாற்றுத் தங்கமாய் பவனிவருவாளே
சித்திரையாளை வரவேற்போம் இன்முகத்தோடு !