வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ விடியலின் உன்னதம் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 03.03.2022

விண்ணின் வேந்தன் வெய்யோன்
வைகறைப் பொழுதினில் வானத்தைக் கிழித்து
வண்ணமாய் பொற்கதிர்களை விரித்து
கங்குல் விலக்கி காசினியில் ஒளியினைப் பரப்பி
பொழுது புலர புன்னகை தவழ
பூக்கள் மலர பனித்துளி விலக
பட்சிகள் பாட பாட்டாளிகள் மகிழ
நித்தமுமாய் விடியலைத் தருகிறான் உன்னதமாய் !

தியாகத்தின் அர்ப்பணிப்பில் தன்மான உணர்வில்
உயிர்களின் இழப்பில் உருவாகுமே உன்னத விடியல்
விடியலின் உன்னதம் விழிகளுக்கு மலர்வனம்
விடியலின் உன்னதத்தைக் காண
விழிகளும் இங்கு ஏங்கித் துடிக்கிறதே !

அண்டை நாடொன்று இங்கு போரினால் தவிக்க
உலக நாடுகள் எல்லாம் போரை எதிர்க்க
பொருளாதாரத் தடைகளையும் விதித்து நிற்க
நேசநாட்டைக் கைப்பற்ற துடிக்கிறது வல்லரசு
தாய்நாட்டைக் காக்க போராடுகின்றனர் மக்கள்
நேட்டோ நாடுகள் கொடுக்குமா நேசக்கரம் ?
உன்னத விடியல் தான் கிடைக்குமா ?
விடியட்டும் விடியல் பிறக்கட்டும் உதயம் !