சந்தம் சிந்தும் கவிதை

மனோகரி ஜெகதீஸ்வரன்

பரவசம்

மிகு களிப்பே பரவசம்
காட்ட வைக்குமது பலரசம்
கண்டிட உண்டே பல வழிகள்
காணும் முறையில்
காட்டுமது
அவரவர் முகம்
வாழும் முறையில்
வரையுமது நன்மை தீமை

பாவலனுக்குப் பொழுதும் பாப்புனைதலே தரும் பரவசம்
காவலனுக்கு காவலை நாட்டுதலே பரவசம்

பேரன்பு நிறைந்தவனுக்குப் பெரும் சேவையே பரவசம்

குடிமகனுக்கு மதுக்கொடையே தரும் பரவசம்
அடிவருடிகளுக்கு அவர்செயலே தரும் பரவசம்
கோடிகள் தேடுவோருக்குப் பணக்குவிவே பரவசம்

பரவசத் தேடல்கள்சில
பிறர்வசம் சேர்க்கும்
உரமின்மை கொடுத்து அசடும் ஆக்கும்
கசடும் கோர்க்கும்

பரவசம் ஊட்டமே
வாழ்வுக்கு
பாதையை மாற்றாது செறிகையில்