சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 253
13/02/2024 செவ்வாய்
“பிள்ளைக்கனியமுது”
——————————
அம்மி மிதித்து, அருந்ததி காட்டி,
அடுத்தடுத்து வருடமும் போக்கி,
அம்மா எனவழைக்கும் அப்பேறு,
ஆகவில்லை என்று பெரும்கீறு!

சாதகம், சாத்திரம் பார்த்தோம்!
சாமியை வேண்டி நோற்றோம்!
பாதகம் ஏற்படாது பார்த்தோம்!
பாவ விமோசனம் செய்தோம்!

பிரபல வைத்தியம் நாடினோம்!
பிறபல சோதனை செய்தோம்!
இரவில் உறங்காது உழன்றோம்!
இறைவன் முறையீடு செய்தோம்!

ஆண்டுகள் நகர்ந்தன ஐந்தாய்!
அனல்மேல் இட்ட இரும்பாய்!
பாடுகள் பட்டோம் இருவராய்!
பாவங்கள் அறியாத பாவிகளாய்!

ஆண்டுகள் ஆறு உருண்டோடின!
ஆண்டவன் கண்களும் விழித்தன!
ஆண்மக வொனறு பரிசளித்தான்!
அவனே முதற்கனி எமக்கானான்!

நன்றி
“மதிமகன்”