சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 164
01/03/2022 செவ்வாய்
“என்னாள் தானென்றாள்!”
அந்நாள் என் வாழ்வில்
-அரியவோர் பொன்னாள்!
அன்றுதான் முதன்முதல்
-என்வீடு வந்தாள்
என்னாள் தானெனச்
-எழிலாகச் சொன்னாள்
“எமக்குள் இடைவெளி
-இனியேது என்றாள்!”

கண்ணால் தூரக்கதை
-சொன்ன கன்னியவள்
காதில் கதைசொல்ல
-என்னருகே வந்தாள்
மண்ணிலும் பொன்னிலும்
-சுகமேது என்றாள்
மனைவியாய் வாழ்வதே
-மேலான தென்றாள்!

உற்றவள் நானின்று
-உம்மருகே இருக்க
உமது கவலையெலாம்
-உருகிவிடும் என்றாள்
கற்றவளாய் என்னைக்
-காமுறவும் வைத்தாள்
காணாத இன்பத்தால்
-களிப்படைய வைத்தாள்!

என்னவள் ஈந்தாள்
-எமக்கிரு செல்வங்கள்
என்துணையாய் எதிலும்
-அவளே இருப்பாள்
அன்னவள் அருகிருக்க
-ஏதுகுறை அவனியில்
ஆண்டவன் அருளுண்டு
-எங்களுக்கு பூமியில்!
நன்றி
மதிமகன்