சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:162
15/02/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“கடலும் நானும்”
உடல் முழுவதும் நீல நிறம்
உமிழ்நீரோ வெள்ளை நிறம்
கடல் என்ற பெயரே சுகம்
கவிஞர் தமக்கு நீ ஓர் வரம்!

அருகில் வந்தால் ஆகா சுகம்
அமைதி வரும் நெஞ்சின் வசம்
எதிலும் இல்லா இன்ப சுகம்
ஏந்தி வருமே உந்தன் கரம்!

உனக்குள் தானே எத்தனை அழகு
உலகில் வேறு உண்டோ சொல்லு
கணக்கிலா உயிர்கள் வாழும் வீடு
கடலடிப் பூக்களும் சூழ்ந்திடும் கூடு!

உனக்கு உப்பில் ஏனிந்த மோகம்
உண்மை சொல் வேண்டாம் தாபம்
கணக்கின்றி ஏதும் இருந்தென்ன லாபம்
கண்மணி உன்னிடம் கேட்டிட ஆர்வம்!

எம்மவர் பலரை இழுத்தாய் அன்று
எமக்கு அதனால் வெறுப்பும் உண்டு
மண்ணவர் லட்சமாய் மடிந்தனர் அன்று
மனதினில் வந்ததை சொன்னேன் இன்று!
நன்றி
மதிமகன்