சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 265
14/05/2024 செவ்வாய்
குருதிப்புனல்
——————-
நெஞ்ச மெலாம் பதறுது!
நினைவு தடு மாறுது!
அஞ்சு மூன்று கடந்தாலும்,
அந்த வலி குடையுது!

வஞ்சி சேரும் வயதினிலே,
வாழ்வு இழந்து போனவனும்!
மிஞ்சி அணிந்த காலுடனே,
மிதி வெடியால் போனவளும்!

கொஞ்சு மொழிக் குஞ்சுகளும்,
கோல இளம் மங்கையரும்,
பஞ்சுத் தலை முதியோரும்,
பாவம், அவர் செய்த தென்ன!

நஞ்சு நிறை வெடிமருந்தும்,
நாச காரக் குண்டுகளும்,
வெஞ்சினம் கொண்டு வந்து,
வேள்வி செய்து விட்டதையோ!

ஐ. நா.வும் மறந்து நிற்க,
அயலவரும் கை கொடுக்க,
பொய் நாக்கு கொண்டவர்கள்,
பொசுக்கி விட்டார் எம்மவரை!
நன்றி!
“மதிமகன்”