வியாழன் கவிதை

நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன்

வரப்புயர..
நாம் வாழ
என்று கூடும் ஈழத்தில்.

வாசல் திறந்து
வசந்தம் தந்தால்
தேசம் மலரும்
பாசம் பொங்கிட.

வரப்புயர வார்த்தை
வாழ்வதை தந்திட
மனம் நெகிழ்ந்து
மானம் காத்தோம்.

பிணங்களாக நாம்
சாய்ந்த போதும்
மனங்களால் வாழ
நினைத்தால் போதுமே!

தோற்றவர் நெஞ்சம்
வீழ்ந்த காரணம் தேடும்.
தேற்றிய நாளை தன்
அனுபவம் சொல்லும்.

மன்னனை வாழ்ந்திட
ஔவைக்கு வாய்த்தது.
வசதியாக வாழ்ந்திட
வரம்புயர்ந்திட கூடுமோ?

நின்று நிந்தை அதை
கந்தை கட்டிய கரம்
கருவி கொண்டேந்தி
வெட்டெறிந்தால் ஆகுமே!

பழியதை விலக்கி
வீரவழி வந்தவர்
மார்பில் அம்பேந்தி
வானம் பார்க்க வாழ.

போரில் குண்டேந்தி
விழுப்புண் பட்டவர்
வடுவோடு வாழ்ந்திட
வரம்புடைந்ததோ இங்கே?

வளம் நிறைந்த நாடு
தினம் ஒரு வீரச்சாவு.
வீடு நலம் வாழ்ந்திட
குருதியில் வயல் நிரம்பும்.

குண்டு மழை பொழிய
நடுவில் நின்று நாம்
குடை ஏந்தி வாழவோ?
பதுங்கு குழியதில்.

சவக்குழி அதுவாகிட
மழை நீரும் ஓடிவந்து
வரப்புயர நிறைந்த
நினைவில் வாழ்கிறது?

சிந்தை மாறிப் போக
கொப்புக் குரங்காக
வானத்து காற்று முகிலாக
நிறம் மாறுகிறதோ?

வரப்புயர அந்த ஒரு
வார்த்தை கொல்லுகிறது.
நெல்லை விதைக்கும்
நிலத்தை பறித்ததால்.

உள்ளம் நிறைக்கும்
கல்வியைப் பறித்து
உரமாகும் பொருளாதாரம்
தேடிடத் தடுத்ததால்.

ஈழத்தில் நாம் வாழ
என்று நிரம்புமோ
நம்மூர் வயல் வரம்புகள்.
வரப்புயர நாம் வாழ?

-நதுநசி.
நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன்
உடுப்புக்குளம் முல்லைத்தீவு.