சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

* * * சாந்தி * * *

சாந்தி நிலவ வேண்டும் பராசக்தி
சாந்தி நிலவ வேண்டும்
மாந்தராகி மனிதர் மண்ணில்
மகத்துவம் காண வேண்டும்

சீற்றம் மறைய வேண்டும் இயற்கை
சீற்றம் மறைய வேண்டும்
ஏற்றம் தரும் நிலங்கள் எழிலாய்
தோற்றம் தரவும் வேண்டும்

தொட்டுத் தொடரும் கிருமித் தொல்லை
விட்டு விலக வேண்டும்
பட்டுப்போன மனத்து மரங்களில்
மொட்டு முகிழ வேண்டும்

சமர்கள் சரிய வேண்டும் பராசக்தி
சமத்துவம் உலவ வேண்டும்
அமரர் உலகைப் போன்றே இங்கும்
அன்பு மலர வேண்டும்