சந்தம் சிந்தும் கவிதை

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
எங்கெங்கு காணினும் சக்தியடா!
அரிசியைக் கிளைஞ்சு அடுக்களை வாசம்
அரிவை தெரிவை அன்றாட வாழ்வில்
அரசியல் வரைக்கும் ஆளுமை கொண்டாள்
பரந்தது விரிந்தது பாரினில் இன்று
மண்ணிலும் விண்ணிலும் மகிமையைக் கண்ட
பெண்களின் சக்தி மாபெரும் சக்தி
மடமையை கொளுத்தி மதியினை வென்று
தடங்கல் தாண்டி திட்டமும் தீட்டி
தடங்கள் பதித்தே தாரணி ஆளும்
திடமனம் கொண்ட தீர்க்கமான சக்தி
நாலு பக்கமும் நாட்டினள் நங்கை
வேலு நாச்சியார் வேட்கையும் சக்தியே
மறத்தமிழ் பொங்கும் மங்கையர் சக்தியே
அறமுடன் விளங்குதே அகிலத்தில் பாரீர்
பாரதி கண்ட புதுமைப் பெண்கள்
தாரணி தன்னைத் தாங்கும் சக்தியே
கவிதனைப் படைக்கும் கன்னித் தமிழ்சக்திகள்
குவியுதே இங்கே கலைமகள் சக்தி
மென்மையை வென்ற மாபெரும் சக்தி
எண்ணிலும் எழுத்திலும் உயர்ந்தே நிற்கும்
மங்கைகள் தானே மகோன்னத சக்தி
எங்கணும் பாரடா ஏற்றியே வையடா
எங்கும் சக்தி எதிலும் சக்தி
பொங்குது பாரில் பெண்கள் சக்தி!
எங்கெங்கு காணினும் சக்தியடா! ப.வை.அண்ணா! மிக்க நன்றி உங்கள் தட்டிக்கொடுத்தலினால் கவிஎழுத சக்தி பிறக்குது.
திரு.நடா மோகன் அவர்களே ! களம் தந்து உற்சாகப் படுத்தும் உங்களுக்கும் மிக்க நன்றி!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.