சந்தம் சிந்தும் கவிதை

கீத்தா ப்ரமானந்தன்

இலக்கு!
கலக்கம் இல்லாப்
பாதை காட்டி
துலக்கி நிற்கும்
தூய ஒளியாய்
அலரும் பொழுதின்
அர்த்தம் சொல்லி
இலக்குத் தானே
இமயம் ஏற்றும்!

மனத்தின் கனவை
மாற்றியே காட்சியாய்
மலரச் செய்யும்
மந்திரக் கோலென
உணர்வை உயர்த்தி
உலகை இயக்கி
உருட்டி நிற்கும்
உன்னதம் இதுவாய்

விண்ணையும் துளைக்கும்
விருட்சமாய் நிலைக்கும்
எண்ணிய முடிக்க
எஃகெனப் பாயும்!
மண்ணைப் பொன்னாய்
மாற்றியே மின்னும்
திண்ணிய அறிவுடன்
தேசமும் இயக்கும்!

இலக்கிலா வாழ்வு
துடுப்பில்லாப் படகாய்
நிலத்திடை ஆயுளை
நித்தமும் உலைக்கும்
என்றும் எதிலும்
இலக்கே நிலைக்கும்!

கீத்தா பரமானந்தன்04-01-2021

துருவம் ஆக்கும் துணிவினை நல்கி
துவளல் போக்கி துடித்தெழ வைத்து
கருமம் தன்னைக் காதலாய்க் கொண்டே
காத்திர மாக்கக் கணங்களை மதிக்கும்