சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

பட்டினி
********
எட்டுத் திக்கும் எதிரொலி கேட்குதே
பட்டினி அவலமோ பார்க்கப் பரிதாபம்
சட்டங்கள் எல்லாம் சரிந்து வீழ்ந்ததே
திட்டம் இன்மையால் திணறுதே நம்நாடு

குட்டி நாட்டில் குறையில்லா வளங்கள்
தொட்டதும் துலங்கும் தொழில்கள் ஆயிரம்
மட்டில்லா ஆசையில் மண்ணையும் விற்றுக்
கெட்டும் மீளாத கடனில் வீழ்ந்தோம்

சட்டிக்குள் இருப்பதே அகப்பைக்குள் அகப்படும்
விட்டது அனைத்தும் விரயம் ஆகிட
இட்ட முதலை எடுக்கும் நோக்கில்
கட்டடம் கட்டியே குந்தப் பார்க்கினம்

வட்டிக்கு வாங்கும் வறுமை நாட்டில்
கொட்டிக் கொடுக்கக் கோடிகள் ஏது
வட்டமாய் எம்மை வருச்சுக் கட்டிப்
பெட்டகத்துள் அமுக்குதே பெரிய நாடுகள்

பட்டினிச் சாவினைப் பார்க்க முன்னம்
நட்டப் பட்ட நாட்டினை மீட்டிடச்
சட்டென உதவுங்கள் சர்வதேச நாடுகளே
மட்டற்ற நன்றியை மனதாரச் சொல்வோம்.

ஒளவை.