சந்தம் சிந்தும் கவிதை

ஒளவை

சாந்தி
======
தினமும் உன்னைத் தவிப்பாய்ப் பார்த்து
மனதில் சாந்தி மறைவாய் இருக்கும்
கனத்த ஆசைகள் கரைந்து போயின்
உனதாய் ஆகி உயிரை ஆளும்

பணத்தால் வருவது பகட்டுச் சாந்தி
குணத்தால் வருவதே குன்றாது நிலைக்கும்
பிணக்கை மறந்து பாசமாய் நாடின்
மணக்கும் சாந்தி மனிதன் வாழ்வில்

உலகம் முழுதும் உண்மை உறவில்
கலகம் இன்றிக் காலம் நகர்ந்தால்
நிலவைப் போல நித்தம் வாழ்வில்
உலவும் சாந்தி உயிர்கள் மனதில்

காற்றுக் கூடக் கலகம் செய்தால்
தோற்றுப் போகுது தரணியில் சாந்தி
மாற்றம் வேண்டாம் மண்ணில் எதிலும்
ஏற்றுக் கொள்வோம் எல்லாம் சாந்தி.

ஔவை.