சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா.

இறுதித் தீர்ப்பு
*************
சரியா தவறா சர்ச்சையில் ஆரம்பம்
பெரிது சிறிதாக பேரங்கள் இடையே
அரிதான வாழ்வியலின் அர்த்தமற்ற நிலையே
புரிந்தும் புரியாமல் புலன்கள் வேறுபட்டும்

யுத்தம் நாடுநாடா உருப்பெற்றே இன்று
வித்தைகள் காட்டுகின்றனர் விவாத மேடையில்
பத்திரம் அவர்பிள்ளை பரிதவிக்கும் அப்பாவி
முத்திரை வெளியிடவே முட்டாள் அரசியல்

முடித்து வைக்க முடியாமல் சிலரும்
முடிவிலியாய் தூண்டிட முனையும் பெருந்தலைகள்
அடிதட்டு மக்கள் அல்லலே மிச்சம்
பிடிவாதம் கொண்டு பிணக்குகள் நிறைந்தே

யாருமற்ற தேசத்தில் ஆணவத்தின் கொடூரம்
பாருங்கள் இத்துடன் போரும் ஒய்ந்திடாதே
வாருங்கள் ஒன்றாய் விரட்டி அனுப்ப
தாருங்கள் இறுதித் தீர்ப்பை நீதியுடன்.

இலண்டனிலிருந்து
இராசையா கௌரிபாலா.