வியாழன் கவிதை

அமுதான தமிழ்

ரஜனி அன்ரன்

தமிழ் என்றால் அமுது
தமிழ் என்றால் அழகு
தமிழ் என்றால் இனிமை
அள்ள அள்ளக் குறையாத செழுமை
அள்ளிப் பருகிவிட்டால் இனிமை
எல்லைகள் கொண்ட பெருமை
எல்லையில்லாத் தொன்மை
அத்தனையும் கொண்டதே அமுதத் தமிழ் !

கால வெள்ளத்தில் நீந்தி
கரை புரண்டு ஓடி
வடவேங்கடம் தொட்டு தென்குமரி ஈறாக
கங்கை தொட்டு கடாரம் வரை பாய்ந்து
சிங்களம் தொட்டு புட்பகம் வரை
எல்லை வகுத்தது அமுதத் தமிழே !

முன்பின் என்ற வரலாற்றைத் தாங்கி
அகம் புறமென வாழ்வினைப் பிரித்து
வாழ்விற்கு இலக்கணம் வகுத்து
இலக்கியம் தந்த ஒரே மொழி அமுதத்தமிழ்
மொழிகள் எல்லாம் பிறந்தே சிறக்க
அமுதத்தமிழ் சிறந்தே பிறந்து
அரியணை ஏறியதே !