வியாழன் கவிதை

“அன்னைக்கு நிகருண்டோ அவனியிலே”

கவி இல(132) 09/05/24

பத்து மாத பந்தம் -கருவறையில்
காத்து வளர்த்த சொந்தம்
தொப்புள் கொடியுறவு
அறுந்திடுமோ என்றும்

அன்பைச் சொரிந்தாய்
வலி தாங்கி ஈன்றெடுத்தாய்
பாலமுது ஊட்டிடவே- பக்குவமாய்
பத்தியமும் காத்தாயே

கண்ணுறக்கம் தொலைத்தாய் -நான்
கண்ணுறங்க நீ தாலாட்டினாய் -என்
வளர்ச்சியிலே இன்பம் கண்டாய்
உயர்ச்சியிலே திண்ணம் கொண்டாய்

பள்ளியில் விட்டுத் தள்ளி நின்றாய் –
நான் துள்ளி வர அள்ளிக் கொண்டாய்
தடுக்கி விழு முன்னே
பதறி வந்து தூக்கிடுவாய்

அம்மா உன் அன்புக்கு
எல்லை தான் ஏது உண்டு
எனக்கென்று எல்லாம் செய்தாய்
உனக்கென்று நான் என்ன செய்தேன்.?
யுகம் பல கடந்தாலும் -நான்
உன் முகம் மறந்திலேன் அம்மா!!!!

நன்றி வணக்கம்.