வியாழன் கவிதை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

16.02.23
ஆக்கம் -260
புழுதி வாரி மண்
பச்சைக் கிளியே பச்சைக் கிளியே
பச்சை மிளகாய்த் தண்டில்
தோரணமாய்த் தொங்கும்
காரணம் என்னவோ
கொச்சைத் தமிழில் கீ ,கீ எண்டு
கத்திக் கத்தி மிச்ச உறவினர்,நண்பர்
அழைத்து இச்சையோடு உண்ணும்
ருசி அல்லவோ

மண்ணை வாரித் துளாவிடும்
கொக்கரக்கோ சேவலாரே
பொக், பொக் கோழியாரே
புழுதியில் குளிககும்
மர்மந்தான் என்னவோ
சின்னப் புழு ,பென்னம் பெரிய
பூச்சி உண்டு நானும் கொழுத்தால்தானே
நீரும் என்னை உரித்துப் புசித்து
உண்டு மகிழ்வீர் அல்லவோ

புழுதி மண் கிளறிடும் மண்புழு தோழனாரே
அடிக்கடி புரண்டிடும் இன்பம் என்னவோ
வியர்வை சிந்தும் விவசாயிக்கு
நான் நண்பன் அல்லவோ

அடிக்கடி விண் பார்த்துப் பிளிறிடும்
தும்பியானைத் தம்பியாரே
எவரும் விரும்பாத புழுதியைத்
தலையில் அள்ளிவாரி இறைக்கும்
துன்பந்தான் என்னவோ
சூட்டு வெப்பம் நாற்பது
மழையின்றிக் காடெரியுதே
உடம்பு தாங்காது புழுதி வாரி
மண்ணில் குளிப்பது குளிர்மையில்
இன்பம் அல்லவோ