சந்தம் சிந்தும் கவிதை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 225
06/06/2023

“ஆறுமோ ஆவல்”
—————————
வாழை நாரைப் பதப்படுத்தி,
வர்ண நூல்கள் உருவாக்கி,
யாழில் நெசவை விரிவாக்கி,
யௌவன மாக்கிடப் பேராவல்!

தாழைத் தும்பை வலுவாக்கி,
தரமாய் நார்கள் உருவாக்கி,
மூளைத் திறனை விரிவாக்கி,
முதலது படைக்க பேராவல்!

தூர்ந்த குளமெலாம் தூர்வாரி,
தூய்மை விவசாயம் கருவாக்கி,
தீர்ந்து போகாமல் திருவாக்கி,
திருவாய்த் திளைத்திட பேராவல்!

உணவுப் பஞ்சம் தனைநீக்கி,
ஊரும் உலகும் ஒன்றாகி,
கனவுப் பொழுதையும் பயனாக்கி,
களத்தில் வென்றிடப் பேராவல்!

அருவும் திருவும் இணையாகி,
அன்பும் சிவமும் ஒன்றாகி,
அனைத்து பேரும் வேறின்றி,
அன்பால் இணையப் பேராவல்!
நன்றி
மதிமகன்