வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

உலகாளும் நட்பே………,,,

நட்பென்ற மெல்லிழையை
நனி சிறக்க தொடுத்தொருக்கால்
பண்பென்ற இழை பின்ன
பரிவோடு உளம் இணைப்பின்

எதிர்பார்ப்பே இங்கில்லை
ஏற்ற இறக்கமும் தான் இடமுமில்லை
தாங்குதற்கு தோளிருக்கும்
தளர்கையிலே பலம் நிறைக்கும்

விழிக்குள்ளே மொழி உரைக்கும்
வித்தையினை மனம் உணரும்
வருந்தி நின்றால் வளம் சேர்க்க
வார்க்கும் வரி-தொடர்நடை பயிலும்

போட்டிகட்கு இடமுமில்லை
போர்க்குணமும் கொண்டதில்லை
நேசக்கரங்களுக்குள். பாசமொழி
பரிதவிக்க வாஞ்சையுடன் வழி தொடுக்கும்

நட்பே நலம் நாடும்
நலிந்தாலும் விழுந்தாலும்
கைகளுக்குள் விரைந்திழையும்
மௌனமொழி கூட இங்கு நட்பின்மொழி