நீர்க்குமிழி
தண்ணீ ருள்ளே பள்ளம் போடும்
பள்ளம் மேலே வள்ள மாகும்
வளியை சுமந்து வாழ்வைத் தொடக்கும்
வட்ட வடிவில் வரைந்து செல்லும்
வரைந்த கணமே வாழ்வை முடிக்கும்
வாழ்வின் உண்மை பலதை
உணர்த்தும்
பிறப்பும் இறப்பும் இயல்பு
என்றிடும்
நிலையாப் பண்பை சிறப்பாய் கூறும்
பூமிப் பந்தின் வடிவம் எடுத்து
நிறமும் மணமும் சுவையும்
கொள்ளா
உருவம் தாங்கும் நீரில் மட்டும்
பெயரும் உண்டு நீர்க் குமிழியாய்
பட்ட மரத்தில் பூக்கத் தொடங்கும்
விட்ட மழையில் முகிழ்த்துத்
தொங்கும்
றோஜா முள்ளில் பூத்துக் குலுங்கும்
மழைத்துளி அவளே மொட்டாய் முகிழ்வாள்
குமிழி போலே குழிந்து இருப்பாள்
கதிரவன் கடுப்பில் கரந்து
செல்வாள்
ஜமுனாமலர் இந்திரகுமார்