வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ அகதி “……நாம் பெற்ற வரமா ?…கவி…ரஜனி அன்ரன் (B.A) 22.06.2023

யுத்தம் எனும் கொடிய அரக்கன்
மொத்தமாய் எமக்குத் தந்தபரிசு அகதி
சித்தம் கலங்கி நாதியின்றித் தவித்தபோது
தேசம் கடந்து கண்டங்கள் கடல்கள் தாண்டி
அயல்நாடு வெளிநாடென புலம்பெயர்ந்து
அடைக்கலம் தேடினர் உறவுகள்
அகதி எனும் முத்திரையும் நிரந்தரமாச்சு !

உயிரினைக் காக்க பொருளினை ஈட்ட
புதிய வாழ்வினைத் தொடர
கனவுகளைச் சுமந்தபடி
கற்பனையில் மிதந்தபடி
நம்பிக்கைச் சிறகினை விரித்து
நகர்ந்தனர் மேலை நாடுகளுக்கு அகதியாக
ஆண்டுகளும் நாற்பது கடந்து விட்டது இப்போ !

கால்த்தடம் பதித்து முனைப்போடு செயற்பட்டு
கடின உழைப்பினால் உயர்ந்து
நிரந்தர வதிவிட உரிமையும் பெற்று
தலைமுறைகள் மூன்றாகி தடம் பதித்து
தனித்துவமாய் வாழ்கின்றார் இன்று
உள்நாட்டில் அகதி வாழ்வு சாபக்கேடாகிட
வெளிநாட்டிலோ அகதி வாழ்வு சொர்க்கமாச்சு
மொத்தத்தில் புலத்தில் அகதிவாழ்வு தந்தது வரமே !