வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ பசி “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 11.08.2022

கொடுமையிலும் கொடுமை பசிக்கொடுமை
பாமரர் வாழ்வினிலோ பெரும் கொடுமை
யாருக்கும் வரக்கூடாதே இந்த வறுமை
வயிற்றினைப் புகைய வைத்து
வாழ்வினை முடித்திடுமே இந்தப்பசி !

பசியின் வலி தெரியாதோர் பஞ்சணையில் புரள
பசியோடு துடிப்பவரோ தெருவிலே அலைய
பாழும் உலகும் கண்டு கொள்வதில்லையே இதை
உணவின் வாசமும் பசியினைத் தூண்ட
பசியெனும் உணர்வு வலியாகி
வாட்டி எடுக்குமே வயிற்றினையும் !

பெற்ற பிள்ளையின் பசியைப் போக்க
சட்டெனவே தந்தை செய்த செயல்
உற்ற நேரத்தில் உதவிய முதலாளி
உடன் உதவிய உறவின் மனிதாபிமானம்
குற்ற உணர்வோடு கூனிக்குறுகி நின்ற காட்சி
குழந்தையின் கள்ளமற்ற பேச்சு
மனதையும் நெகிழ வைத்ததே !

நிஜத்தின் தரிசனத்தை இளகிய மனத்தை
தன்மானத்தினை மகளின் எதிர்காலத்தினை
சுயமரியாதையின் மதிப்பினை
மனிதாபிமானத்தின் மாண்பினை
தெளிவாக்கியதே காட்சிப்பதிவு
பசித்தோர்க்கு உணவளித்து பண்பாடு காத்து
இல்லாதோர்க்கு இரு கரமும் கொடுத்திடுவோம் !