வியாழன் கவிதை

ரஜனி அன்ரன்

“ இசையரசி “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 09.02.2023

இசைத் துறையின் பொக்கிஷம்
இந்தியத் திரையிசையின் இசையரசி
இசைஞானம் மிக்க கலைநாயகி
திரையிசையில் பொன்விழாக் கண்ட கலையரசி
தேசீய விருதுகளை மூன்றுமுறை பெற்று
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி
பத்மபூசண விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்ட வேளை
பறித்துச் சென்றானே காலனும் விரைந்து !

இசையரசியின் இசைப்பயணம்
எழுதிவிட முடியாக் காவியம்
ஏழு ஸ்வரங்களையும் இசைத்த இசைவாணி
சங்கதிகளை இசைத்துப் பாடி
சங்கீத உணர்வோடு இசைத்த குயில்
பாடாத மொழிகள் எதுவுமில்லையே !

தமிழுக்கும் தமிழிசைக்கும் பெருமை சேர்த்து
தமிழிசையால் எமைக் கட்டிப் போட்டு
தாயகக் கானங்களை எமக்காய் பாடி
தலைமுறைகள் நான்கோடும் பயணித்து
இசைவானில் இரண்டறக் கலந்துவிட்ட
இசையரசியின் இசைப்பயணம்
இனிய கீதங்களாய் என்றும் ஒலிக்கும்
இசையரசியின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பே !