சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

காதல்

மின்னல் கொண்ட விழிகள்
மீட்டும் இராக நல்லிசையே!
கன்னல் மொழியே பேசும்
கன்னி யுள்ளம் பேரழகு!
சன்னல் வழியே பார்த்துச்
சாடை காட்டும் காட்சியெல்லாம்
இன்னல் யாவும் நீக்கும்!
இனிதாய் வாழ வழிகாட்டும்!

புவியில் பிறந்த பிறப்பும்
பொலியும் தங்க நிலையேற்கும்!
கவியில் பாடும் கருத்தும்
கன்னல் நல்கும் சுவையேற்கும்!
குவியும் சொற்கள் சேர்ந்து
கொஞ்சும் இன்பக் கலையேற்கும்!
‌செவியில் கேட்கும் கானம்
செம்மைத் தமிழின் சீர்காட்டும்

மென்மை கொண்ட பெண்மை
மேன்மை கொண்ட பிறப்பாகும்!
கன்னம் சிவக்கும் காதல்
கனிந்து மேவும் கூட்டுறவு
பின்னல் பின்னும் அழகி
பிறைபோல் சூடும் நற்சுட்டி
இன்பம் தருமே கோடி
ஈடில் தமிழைப் பாடி!

நகுலா சிவநாதன்