சந்தம் சிந்தும் கவிதை

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*** மாதர்க்கு ஓர் அணிகலனாம் மாதா மறைந்தார்***

அன்றலர்ந்த மலராக அகமகிழ்வில் எம்முன்
அன்பு விளக்கேற்றி அறிவு வழிகாட்டி
அன்னை இனம்காணும் அல்லல்கலி நீக்க
கன்னல் மொழியாலே கவியரங் காக்கி
மன்றில் மகளிரை மனமகிழ ஏற்றி வைத்து
வென்றிட பெண்ணினம் வேண்டும்
எனப்பாடி
நன்றாய்க் கண்முன்னே நற்பணி ஆற்றி
சென்று மறைந்தாரே செந்தமிழ்த் தாய்

விண்ணிருந்து இறங்கிய வெண்ணிலவு
மண்ணில் மரகத மகத்துவ ஒளி காட்டி
திண்ணிய நெஞ்சத்தே தேசப்பற்றுக் கொண்டு
வண்டமிழால் வளங்களை வாரி வரைந்திட்டு
கண்காணாத் தேசம் கடந்ததும் ஏனோ –
எண்ணத்தில் மாதா நீங்கள் ஏற்றிய விளக்கை
வண்ணமாய் அணையாமல் வளர்த்திட
வரம் மட்டும் தந்திடம்மா….