நாதம்
———
கோவிலில் கோபுரம் ஓங்கியே நிற்கும்
காண்டா மணியும்
நாதமாய் ஒலிக்கும்
கண்ணில் காணா கடவுள் கூட
காற்றில் கலந்தே மனதுள்
நுழைவார்
நல்லூர் கந்தனும் காற்றோடு வருவார்
மணியின் நாதமாய்
விடியல் தருவார்
ஓங்கார தீபம் ஓமெனும் பிரணவம்
மேளம் தாளம் பேரிகை முழக்கம்
ஒலியின் அலைகள் காட்சியாய் நிலைகள்
கல்லறை வீரரும் துயிலினைத் துறந்திட
மணியின் நாதமும் ஓங்கியே ஒலிக்கும்
மனுவின் ஆட்சியில் நீதியும்
கலந்திட
கன்றும் சேயும் சமமென்றாகிட
மணியின் நாதமே
ஆதாரம் ஆனது
நாதம் நம்மை பிணைத்தே வைக்குது
கவியாய் இசையாய் வானலையில் கலக்குதே!
ஜமுனாமலர் இந்திரகுமார்