சந்தம் சிந்தும் சந்திப்பு
பூத்திடுவாள் தைமகளும்
உழவர் மனமெல்லாம் உளமகிழ்வு அடைந்திடவே
ஊக்கம் பலன்தரவே உண்டியும் நிரம்பிடவே
கழனியும் விளைந்திருக்கு கதிரவனின் ஒளியாலே
பூக்கட்டும் தைமகளும் புதுப்பொலிவு பிறந்திடவே
பொலிந்திருக்கும் நெல்மணிகள் புத்தரிசிப் பொங்கலிட
மாக்களெல்லாம் மகிழ்வடைய மணிமணியாய் நெல்மணிகள்
மனதையும் குளிர்விக்க முத்துமுத்தாய் விளைந்திருக்கும்
கதிரவனின் வரவுகண்டு கமக்காரன் களிப்படைந்து
கோலமிட்டு கரும்புநட்டு தோரணமும் கட்டியுமே
துதிபாடிப் பொங்கலிட்டு துதித்துடுவார் தமிழரெல்லாம்
தரணியெல்லாம் பொங்கலிடப் பூத்திடுவாள் தைமகளும்.
கோசலா ஞானம்.